Friday, March 28, 2008

இறுதிப் போர் இதுவன்றோ?

இறுதிப்போர் இதுவன்றோ?


மறத்தமிழர் நாமென்று மார்தட்டி வாழ்ந்திருக்கும்
மன்னும் உயர்குலமே! மரபுபேண் என்னினமே!
உறவின ரெனத்தழுவி அணைத்து மகிழ்ந்;திட
அன்னை நிலமடந்தை ஆவலுடன் அழைக்கி;ன்றாள்!
புறம்பாட வைத்தவுயர் வரிப்புலி விறலோர்தாம்
பொறுமை காக்கின்றார்! போர்முழக்கம் கேட்கிறது
இறுதிப்போர் இதுவன்றோ? இன்னும் ஆகவில்லை.
இரண்டொரு நாட்களில் எல்லாம் முடிந்துவிடும்!

விடுதலை வீரர்தம் வெற்றிகள் தாமங்கு
விண்ணதிர முழங்கி வீறுடன் நிற்கிறதே
கடும்போர் புரிந்தங்கு மாற்றான் கலங்கிடக்
களத்தினில் வேங்கைகள் அணியென நிற்கின்றார்
மடுநகர் வீழ்த்திடப் பெரும்படை விடுத்தோர்
மடிந்தனர் ஒழிந்தனர் மாதுயரில் வீழ்ந்தனர்
சுடுகாடாய் ஆக்கியே இராணுவத்தைப்; புதைக்கின்றார்
சுற்றம் அறிந்திடாது செய்திகளை மறைக்கின்றார்!

தள்ளாடி முகாமங்கு சாய்ந்து நிற்கிறதே!
தலைதெறிக்க எறிகணையிற் தாழ்வுண்டு போயினரே!
அள்ளிவந்து குவித்திட்ட அன்னியரின் ஆயுதங்கள்
அத்தனையும் அழிந்தனவே அலறுகிறார்! கதறுகிறார்!
விள்ளற்கரிய இழப்புக் கள்தமைப் பெற்றோர்
வகையேது மறியாது வன்முறையை ஆங்கே
பள்ளிச் சிறார்மீது பரவலாய்த் திணிக்கின்றார்
பாவையர் மேனியிலும் குண்டுமழை பொழிகின்றார்!

முகமாலை மணலாறு நாகர் கோவிலென
மும்முனைத் தாக்குதலில் வன்னியை வீழ்த்தியே
அகமெங்கும் தமழீழ அன்னையே நிறைவாய்
அன்னவள் சிறைமீட்கப் புறப்பட்ட தீரரைப்
பகைவர்தாம் அழிப்போமெனப் பகர்கின்றார் பலவாறு
பட்டதுவோ படுதோல்வி பன்னாடும் அறிந்ததே!
நகைப்பிற் கிடமன்றோ? நாணியே நிற்கின்றார்!
நாட்டு மக்களே நீதிதனைக் கற்பிப்பார்!

பிடிப்போ மெனக்கூறவும் பின்னின்று வீழ்த்தவும்
பிரபாகரன் என்ன படவுலகின் நாயகனா?
பொடிப்பொடியாய்ப் பகையுடைத்துப் புதியவர லாறுதனைப்
படைத்திடப் பிறந்த புறத்திணைத் தலைவனன்றோ?
மடிதவழும் பிள்ளயைவன் மன்னும் தமிழன்னை
மாதவம் செய்தன்று மலர்வுடன் பெற்றுமே
குடிமக்கள் தமைக்காக்கக் கோபுரமாய் வளர்த்தெடுத்த
கொள்கை மாறிலாக்; குலமகன் இவனன்றோ?

தன்மானத் தமிழனெனத் தரணியிலே துலங்கும்
தீரனாம் ஒருவனின் மூச்சிங் குள்ளவரை
பொன்மனம் மிக்கவிப் புரவலனை யாரும்;
பகையென நெருங்கிப் பற்றிட விடமாட்டான்
இன்னுயிர் கொடுத்தேனும் இணையனாய் இருந்திடுவான்
இறுதிஅசை வுள்ளவரை தலைவனுயிர் காத்திடுவான்
அன்னவன் எம்தம்பி ஆதவனின் மறுஉருவம்
அருவம் உருவமென இலங்குவோன் அவனன்றோ?

வீட்டிற்கொரு பிள்ளையென நாடுகாக்கப் புறப்பட்ட
வீரம்கொள் வரலாறு விதைந்துரைத்து மகிழும்நாம்
கூட்டிச் செல்கின்றார் குழந்தைகளைக் களத்திற்கெனக்
குய்யோ முறையோவெனக் குற்றம் சுமத்துகிறோம்
ஈட்டினர் வெற்றிகள் எம்குலத்தோர் இவ்வழியே
எண்ணிப் பார்த்திடத் தயங்குகிறோம்; ஏன்தானோ?
நாட்டிற்காய் உழைத்தோர்தம் வரலாறு கள்தம்மை
நலமே யறிந்திடின் தெளிவாகும் சிந்தனைகள்!

போராடி வென்றுநாம் புள்ளிகள் பெறவேண்டும்!
புன்மையாள ரைத்துரத்தி விரட்டிட வேண்டும்!
காரார் குழல்மங்கை கன்னித் தமிழன்னை
கைவிலங்கு முற்றாய்த் தெறித்திடல் வேண்டும்!
சீராய் வாழ்ந்திடும் செந்தமிழின மேயுன்கை
சிவந்திட நீயவர்க்கு வழங்கிட வேண்டும்!
சார்வார் எம்பக்கம் அனைத்துலக நாட்டினரும்
தமிழீழத் தாயவளை இணைத்திடுவார் தம்மோடு!



Wednesday, March 5, 2008

மறந்தேன்! மெய் மறந்தேன்!

மறந்தேன்!
மெய் மறந்தேன்!

"என்ன ஜேகே உங்களிட்ட மனேஜர் அந்த பைலை எடுத்து வரச் சொல்லி எவ்வளவு நேரமாகுது நீங்க என்ன பண்ணிகிட்டு இருக்கிங்க?" தன்னுடன் வேலை செய்யும் கவிதாவின் கேள்வியொலியின் பின்னர் தான் நினைவிற்கு வந்தான் ஜேகே."ஓ சொறி இதோ வாறன்"என்றவாறு பைலுடன் புறப்பட்டான்.சிறிது நேரத்தின் பின்,மனேஜரின் அறையிலிருந்து திரும்பி மீண்டும் அமர்ந்தான்.

மேசையில் எவ்வளவோ பைல்கள் கணனியின் தரிசனத்திற்கு காத்து கிடக்கின்றன.அவற்றை கவனிக்க அவன் தயாரில்லை. எண்ணங்கள் நேற்றைய அந்த அழகியோடு போய்விட்டது.

நினைவுகள் நேற்றைக்குத் திரும்புகின்றன. நேற்று அலுவலகத்திலிருந்து திரும்பி வீடு செல்லும் போதுதான் அவளைக் கண்டான். என்ன அழகு!

சென்று கொண்டிருந்த அவனின் காரும்,பார்வையும் ஒரே நேரத்தில் நின்றன. காரிலிருந்து இறங்கி அவள் பின்னாலேயே செல்கிறான்.தொடர்ந்து சென்ற அவன் ஒரு கணத்தில் அவளை நிறுத்தி பேசி விட்டான். முதலில் தயங்கிய அவள் பின்னர்தான் நன்கு பேசத் தொடங்கினாள்.

நிறைய நேரம் கதைத்த பின்னர் தான் அவளுக்கு பெற்றோர் இல்லை.அவள் பெயர் சுருதி என்பதையெல்லாம் அறிந்தான். என்னவொரு குரலில் இனிமை!பண்பு!குறும்பு!அவளின் ஒவ்வொரு சைகையிலும் செய்கையிலும் மெய் மறந்தே போய்விட்டான். பின்னர் பிரிய மனம் இல்லாமல்
வீடு திரும்பினான். அவளுக்கும் அவ்வாறுதான் இருக்க வேண்டும்.

ஜயோ! இன்று மீண்டும் அவளைப் பார்க்கவேண்டும்,பேச வேண்டும் என்று மனசு துடிக்கிறது.
"அலுவலகத்திற்கு அரை நாள் லீவு போட்டு விட்டுச் சென்று விடுவோமா?"என்றும் யோசிக்கிறான். போகத்தான் வேண்டும்!லீவு பெற்று வீட்டு திரும்புகிறான்.வீட்டுக்கு தன் காரில் விரைந்தபடி,கதவைத் திறந்த தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு சுருதியைப் பார்க்க விரைகிறான்.
அனாதை இல்லத்தில் தங்கியிருக்கும் எட்டே வயது நிரம்பிய அவளை,எட்டு வருடமாக பிள்ளைப் பாக்கியம் கிடைக்காத தங்களுக்கு இன்றிலிருந்து மகளாக வேண்டும் என்ற எண்ணத்துடன்...!