Wednesday, August 20, 2008

ஒரு கடிதம்

சகோதர இன நண்பனே!
வெற்றுத் தோட்டாக்களை எண்ணி
கணக்குப் படித்தவர் நாம்.
விழும் வெளிச்சக் குண்டுகளில்
மக்னீசியம் எடுத்து
விஞ்ஞானம் படித்தவர் நாம்!
எறிகணைகளின் கோதுகளில்
பூங்கண்றுகள் வளர்த்தவர் நாம்!
புழுதியைக் குடித்து
புயலோடும் வாழக்
கற்றுக் கொண்டவர் நாம்!
ஏசிக்குள் நீங்கள்
இருந்த போதெல்லாம்
தூசிக்குள் துவெண்டெழுந்தவர் நாம்!
நீங்கள்
வேதங்களைப் படித்து
மேதைகளாக நினைத்த போதெல்லாம்
நாங்கள்
வேங்கைகளை படித்து
வரலாற்றை யாசித்தவர்கள்!
நீங்கள்
மூச்சுக் காற்றிற்கே
முகவரி தேடிய போதெல்லாம்
மூச்சுத்தான் எங்கள்
முகவரியென்று கத்தியவர் நாம்!
காய்களுக்காய்
மரங்களை தறிப்பவர்கள் நீங்கள்
காய்களுக்காய்
மரங்களை வளர்ப்பவர்கள் நாங்கள்!
எங்கள் புன்னகையை
நீங்கள் ரசிக்கத் தயாராயில்லை
ஏனெனில்
உங்களுக்கு அரசியல் தெரியும்!
எங்கள் கண்ணீர்
உங்களுக்கு தெரிவதில்லை
ஏனெனில்
விழித்திரை நீங்கி
இனவெறித் திரையல்லவா
உங்கள் கண்களில்!
நீங்கள்
காமத்திற்காய்
காதலை சிதைப்பவர்கள்
உங்களுக்கு
எப்படித் தெரியும்
அன்பின் அர்த்தம்!
அதனால்தான் சொல்கிறோம்
எம்மை நாமே
ஆழ்வோம் என்று
அங்கு வந்து பாருங்கள்
அன்பின் ஆழத்தை!

No comments: